| சகல யோகம் தரும் வரலட்சுமி விரதம் |
|
சகல யோகம் தரும் வரலட்சுமி விரதம்
ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுசரிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன்,செல்வம் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.
திருமணத்தடை நீங்கும்.சகல யோகங்கள் பெருகும்.இந்த விரதம் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுசரிக்கின்றனர். லோக மாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள்.
தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுசரிக்கின்றனர்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள்.
பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே என்கிறார் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரெங்கராஜன்.
பலன்கள்:
வரலட்சுமி விரதம் இருந்தால் பல பலன்கள் ஏற்படும். இந்த விரதம் இருப்பவர்களின் வீட்டுக்கு மகாலட்சுமி தேடி வருவதாக நம்பிக்கை.வீட்டில் செல்வம் குவியும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். காரிய தடை நீங்கி நினைத்தது பலிக்கும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகும். சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும்.
குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும்.
|