Lessons on yogas: சரஸ்வதி யோகம் சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும். ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான். இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga) Vairinchi means Saraswathi and this is a yoga for learning. யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும். இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை. அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.
|