|
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பரத்வாஜகோத்திரத்தில் பிறந்தவர்களும் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது மகம் நட்சத்திரத்தன்றோ வழிபட வேண்டிய திருத்தலம் திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
தல வரலாறு : சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது, தனக்கு உதவியஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும்விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார். இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.
மகம் நட்சத்திர கோயில்: கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. பரத்வாஜர் மகம்நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜைநடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூபமாக கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்பதுபழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாக கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
இரண்டு அம்பிகையர்: சிவனுக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னதியில் மாணிக்கவல்லி, மரகதவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில்அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர் களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்குநோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான் அம்மன் சன்னதியில் அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.
சூரிய தரிசனம்: சிவராத்திரியை ஒட்டி 30நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும்.காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.
திருவிழா: மாசி மகம்
திறக்கும் நேரம்: காலை 6 -மாலை 6 மணி.
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் உள்ள விராலிப்பட்டி பிரிவு ஸ்டாப்பிற்குச் சென்று, அங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் இக்கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.
போன்: 95782 11659, 93624 05382.
|