|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ செல்லவேண்டிய தலம், திருச்சி மாவட்டம் காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்.
தல வரலாறு : சந்திர பகவான் 27 நட்சத்திர தேவியரில், கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தேவியை மணந்த போது, கைலாயத்தில் உள்ள சிவன் பார்வதியை தரிசிக்க விரும்பினார். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தார். இதனால் இத்தல இறைவன் கைலாசநாதர், அம்மன் கருணாகரவல்லி ஆனார்கள். கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. எனவே ஞாயிற்றுகிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண ஹோமங்கள் செய்தால் கண்டிப்பாக மழைவரும் என்கிறார்கள்.
ரேவதி நட்சத்திர தலம்: சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் , பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனிடமும் அம்மனிடமும் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்õக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நோய் தீர்க்கும் தலம்: காசிக்கு அடுத்த காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும். நீர் சம்பந்தமான நோய்கள், கண்சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது. ஊரிலிருந்து தள்ளி கோயில் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வருபவர்கள் குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது சிறப்பு.
கோயில் அமைப்பு: சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதிப்பித்து கட்டியுள்ளான். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து 61 கி.மீ. தூரத்தில் காருகுடி உள்ளது.திருச்சியிலிருந்து முசிறி (40 கி.மீ)சென்று, அங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை (21 கி.மீ) சென்று பின் 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் வரலாம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். போன் : 97518 94339,94423 58146
|