|
மந்திரப் படலம்
அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன்,
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்.
அரசவை விடுத்த பின் - அரசர் கூட்டத்தை அனுப்பிய பின்பு;
ஆணை மன்னவன்- ஆணையைச் செலுத்தும் தயரத மன்னன்; புரைதபு
நாளொடு பொழுது - குற்றமற்ற நாளொடு கூடியமுகூர்த்தத்தை;
நோக்குவான் - பார்ப்பதற்கு; உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு -
சோதிட நூலாராய்ச்சியுடைய சோதிடரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு;
வரை பொரு மண்டபம்மருங்கு - மலையை ஒத்த மண்டபத்தில்;
போயினான் - போய்ப் புகுந்தான்.
சோதிடம் பார்க்க அமைதியான சூழல் வேண்டுமாதலின், சோதிடம்
வல்லாரோடும் தனியிடம்சென்றான். உரை - ஆகுபெயர்; சோதிட நூலைக்
குறித்தது.
|