| பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் உலகத்திற்கு ஒளி வழங்குகின்றனர். இந்த கண்கண்ட தெய்வங்களுக்கு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் விஸ்வநாதர் கோயிலில் தினமும் காலை,மாலையில் பூஜை நடக்கிறது.
தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன், இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது. பிற்காலத்தில், பக்தர்கள் இங்கு விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினர். ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தரும்படி உருவாக்கப் பட்டனர். காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடத்தும் வழக்கம் உருவானது.
சுமங்கலி பூஜை: உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. தை கடைசி வெள்ளியன்று ராகு காலத்தில் (காலை 10.30 - 12 மணி) இங்குள்ள துர்க்கைக்கு சுமங்கலி பூஜை நடக்கும். அன்று பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை பிரசாதமாகத் தருவர். ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது. சிவன் சன்னதிக்கு இடப்புறம் பத்திரகாளியம்மனுக்கு தனிக் கோயில் உள்ளது.
பிரார்த்தனை தலம்: இங்கு சிறிய நாகர் சிலை ஒன்றுள்ளது. திருமண தோஷத்தால் பாதிக்கப் பட்டோர், கோயில் முகப்பில் உள்ள நாகருக்கு பாலபிஷேகம் செய்து வணங்குகின்றனர். சரஸ்வதி பூஜையன்று இங்குள்ள சரஸ்வதி சன்னதியில் சகலகலாவல்லிமாலை பாராயணத்துடன் விசேஷ பூஜையும், மாணவர்களின் கல்வி சிறக்க வருடத்தில் ஓர்நாள் ஸ்ரீவித்யா ஹோமமும் நடக்கும்.
மூன்று தரிசனம்: மார்கழி திருவாதிரை விழாவின்போது விஸ்வநாதர் சன்னதி நேரே நடராஜரையும், அவருக்கு எதிரே ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில் சிவன், நடராஜர் மற்றும் அவர் முன் உள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதனை நடக்கும். ருத்ராட்சம் இத் தலத்தின் விருட்சம்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரோட்டில் 73 கி.மீ., தூரத்தில் சாத்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 5- 10.30 மணி, மாலை 5- இரவு 9 மணி. வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை.
போன்: 04562- 299 800, 94865 11699. |