| கடை பிடிக்க வேண்டிய விரதமுறை: |
|
பிரம்மதேவன், திருமால், குபேரென், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி பகவான் உள்ளிட்ட தேவர்கள் பலரும் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.
தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சில சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கும் ஈடாகாது.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டம். அதன்பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்தாலும் நலம்.
வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருநீறு, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோவில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோவில்களிலும் சிவபூஜை செய்யலாம்.
ஐந்தெழுத்து மந்திரமாக சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜை யுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.
பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, சன, பசுபதி, உக்ர, ருத்ர, மா மற்றும் மகாதேவா என்ற கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோவில்களுக்கும் வழங்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
சிவ, ருத்ர, பசுபதி, லகண்டா, மகேஸ்வரா, ரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, மா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர் பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்களை நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடை பிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதனுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னத் தத்துவம்.
இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்துது முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.
|