|
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்பட்டினம் மாவட்டம் கோமல் கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்.
தல வரலாறு : ஒரு முறை பார்வதி தேவி, ஈஸ்வரன் எவ்வாறு இந்த உலகத்தை இயக்குகிறார் என்பதை அவர் வாயாலேயே கேட்க விரும்பினாள். அப்போது தன்னால் எப்படி இந்த பிரபஞ்சக் தி இயங்குகிறது என்பதை உணர்த்த சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். சிவனும் பார்வதியும் உரையாடிக்கொண்டிருந்த போது, பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக சிவனின் கண்களை பொத்தினாள். அந்த நொடியில் இந்த உலகத்தின் இயக்கங்கள் அனைத்தும் நின்று போயின. இதைக்கண்டு அதிர்ந்து போனாள் பார்வதி. தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என் கண்ணைப்பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் யாம் மறையப்போகிறோம். நீ பசுவாக மாறி இந்த ஜோதியைக்கண்டு என்னை வந்து சேர்வாய,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப்படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவ ஜோதியை தேடி இந்த பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். அப்போது சிவனது திருக்கரத்தில் இருந்து தோன்றிய ஹஸ்தாவர்ன ஜோதியானது, ஒரு அஸ்த நட்சத்திர நாளில் இப்பகுதியில், கோமளீய ஜோதி சுயம்பு லிங்க வடிவில் கிருபா கூபாரேச்வரராக தோன்றி பார்வதிக்கு அருள்பாலித்தது.
அஸ்தம் நட்சத்திர தலம்: கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். ஆனால் அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக கூறப்படுகிறது. எனவே அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது கைகளாலேயே கொழுக்கட்டை, வடை, லட்டு, ரவாலட்டு, போளி ஆகிய பதார்தங்கள் செய்து, அஸ்த நட்சத்திர நாளில் இங்கு தானம் செய்வதுடன், கரங்கள் கூப்பியபடி கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பசு, கன்றுடன் இக்கோயிலை வலம்வந்து வணங்குகிறார்கள்.
கோயில் அமைப்பு: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.
திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்õர்த்திகை
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து, 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது. குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 7 - மதியம் 12 , மாலை 5.30 -இரவு 7.30 மணி
போன் : 95002 84866
|