|
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
சிவனதுநட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். ஏனென்றால் பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நாளிலும், சிவபெருமான் அபயம் தருபவராக உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண் டலமும் ஒன்று. எனவே இந்த மண்டலத்தில் நுழைந்திடவே அசுரர்கள் பயப்படுவர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்தபலன் தரும் என்றும் கூறப்படுகிறது. பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகிய இரு மகரிஷிகளும் தினமும் இத்தலத்தில் அருவமாக அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ரைவத சக்தி என்பது சிவனது முக்கண்ணில் உறைகின்ற ஒருவித ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தவர்.இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா!
என்ற திருவாதிரை கோயில் பற்றிய பரிபாஷைப்பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
எம பயம் போக்கும் தலம்: தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்த படியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
திருவாதிரை நட்சத்திர தலம்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனும், அரசனுமான அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளான். ஆரம்பகாலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக திகழ்கிறது. இத்தல அம்மன் சுந்தர நாயகிதெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது.
திருவிழா : பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி
திறக்கும் நேரம் : காலை 6.30 - மதியம் 12, மாலை 4 -இரவு 8.30 மணி
இருப்பிடம் : பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அதிராம் பட்டினம் உள்ளது.
போன் : 99440 82313,94435 86451
|