ஆயுள் பலம் தரும் சித்தர் கோயில்! |
செளகந்திகாபுரம், ஹரிசரணநல்லூர் என்றெல்லாம் போற்றப்பட்ட தலமான இங்கே படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் இருவரும் தவத்தில் ஈடுபட்டனர். ஒரு நெல்லி மரத்தின் அடியில் லிங்கத்தை அமைத்துவழிபட, அவருக்கு நெல்லியப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லியை சமஸ்கிருதத்தில் தாத்திரி என்பர். அதன்படி இந்த இறைவன் "தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மணம் பொருந்திய வனத்தில் சிவபெருமான் காட்சி தருவதால் இத்தலத்துக்கு திருமணம் என்றும் பெயர். திருமன்றம் என்பது மருவி திருமணம் ஆனது என்பர். இது, சித்தர்கள் தவமிருந்த இடமாதலால் "சித்தர்காடு எனப்பட்டது. பின்னாளில் சித்துக்காடு என மருவியது.
ஆயுள் பலம் தரும் ஜடாமுடி சித்தர்: கோயிலிலுள்ள தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சந்நிதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாகக் காட்சியளிக்கிறது. அதனால், இந்த நந்திக்கு மூக்கணாங்கயிறு கிடையாது. இங்குள்ள ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
கண்நோய் போக்கும் கருடக்கொடி சித்தர்: இந்தக் கோயிலுக்கு அருகே பிரம்மனுக்குக் காட்சியளித்த ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. பெயருக்கு ஏற்ப அழகுறக் காட்சி அளிக்கிறார் பெருமாள். திருமழிசையாழ்வார் இங்கே தவம் புரிந்தாராம். இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர். இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர். பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான். இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார். இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும். முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள். யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சிதரும் நரசிம்மர்களை வழிபட்டால் செய்வினை தோஷங்கள், வீண் பயம் போன்றவை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுவாதி நட்சத்திர தலம்: நமசிவாய மந்திரத்தின் வகாரத்தில் சுவாதி என்ற சொல் அடங்கும். சுந்தரராஜ, வாசுதேவ, திரிவிக்ரம வடிவங்களுக்கு உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி. எனவே சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருள்புரியும் சித்துக்காடு தலம் வந்து வழிபடுவது சிறப்பு என்பர்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழையர்க்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், இங்குள்ள பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை செல்லும் வழியில் 8 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ் வசதி குறைவு. எனவே பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
|